Tuesday, March 25, 2008

முகம் மறந்த போழ்தினிலும் அகம் அலறும் ஆசைகள்...

பட்டுத்துணி கொண்டு

நிறுத்திடுவேன் - மஞ்சு

நிறைந்த தென்றலாயினும்.

என்

நெஞ்சில் நிறைவாய்

பயணம் செல்ல உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

சோலைக்கு வெளியிலேயே

தடுத்திடுவேன் - எந்தத்

தேனீயாய் இருந்தாலும்.

என்

மகரந்தத் தேன்குடித்து

மதி மயங்கிக் கிடக்க உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

நாண் அந்தே

போய்விடுவேன் - யார்

எனை மீட்டினாலும்.

என்

நாண் தொட்டுச்

சுரம் மீட்ட உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

துதிக்கை நீட்டி

மண்டியிட ஒப்பேன் - முதுகில்

பயணிக்க கள்ளழகரே விளைந்தாலும்.

என்

உடல் தழுவி ஊர்ந்தேறி

காதோரம் கால்களால் நிரட உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

ஆடைக்கு அப்பாலேயே

அமர்ந்திடுவேன் - முத்துக்

கோர்த்த மாலையாயினும்.

என்

ஆடைக்குள்ளே

ஆர்பரித்துக் கிடக்க உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

கல்லாகவே இருந்தாலும்

முள்ளாகக் குத்திடுவேன் - பட்டது

ராமன் பாதமேயாயினும்.

என்

அங்கம் ஜதியெழுப்ப

நங்கென்று மிதிக்க உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

சுதி மறுத்து

அடுப்பூதக் குழலாவேன் -

எடுத்தூதியது கண்ணனேயாயினும்.

என் மீது ஈர இதழ்பதித்து

எச்சில் காற்றுச் செலுத்த உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

விரிந்து விரிசல் விட்டு

சிதைந்திடுவேன் - சின்னஞ்சிறு

உளி கொண்டே செதுக்கினாலும்.

என்

அங்கம் ரசித்து

அணு அணுவாய் வடிக்க உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

மடி சுரக்க

மறுத்திடுவேன் - காம்புகளை

நெறி கட்டிப் போனாலும்.

என் மனதார மடி திறக்கக்

கை ஊர உனை மட்டுமே

அனுமதித்திடுவேன்.

No comments: