Monday, March 31, 2008

வெள்ளெனவே வந்துரு ராசா....

வேடிச்சி மருமவள
போன வாரங்கோடப் பாத்தேன்
சீவி சினுங்கெடுத்து
மினுக்கீட்டுத் திரிஞ்சா.

நல்லாத் தான் இருந்தா
சிருக்கி மவ.

வாளத் தோப்பு வளவுள
வவுத்தப் புளுத்தீட்டு வந்தவ
வக்கனையா சிரிச்சா.

ஹீம்...
மூனு பெத்த மூதேவி
மூனையும் பொட்டையாவா
பெக்கனும்.

சாம நேரத்துலே
அய்த்தகாரி வேடிச்சி
மூனாம் பொட்டக்கி நல்ல பாலு பொவட்ட
கோடியூட்டு கேணிப் பாட்டியக் கூட்டியார
வேவ வேவமாப் போனாளாம்.

பொல்லாத ரோசம்
பொத்துக்கிட்டு வந்துடுச்சாம் இவுளுக்கு.

உட்டா ஊரயே கெடுக்குறவ
ஊஞ்சத் தோப்புச் சாரியில
தூ...க்கி மாட்டிக்கிட்டாளாம்.

செத்தவதாஞ் செத்தா
ஒரு ஆத்துச் சாரி கெடைக்குள இவுளுக்கு.

கேணிப் பாட்டியக் கூட்டியார
ஊஞ்சத் தோப்பவுட்ட
வேற வழியுமில்ல.

பொளுது மசங்கற நேரம்
கேணிப் பாட்டி வள்ளிங்காட்டியும்
வெள்ளெனவே வந்துரு ராசா...
இந்தவூட்டு மூதி பெத்த பொட்ட
என்ன சித்த ஒரங்க வுடாது.

வேடிச்சி மருமவ எளவுக்கு
மாசாணிக் கௌவி வந்துருக்கா...
அவள வெச்சு அட்சசு பன்னிக்குவம்.

நல்ல பாலே இல்லீங்காட்டியும் - கௌவி
நெல்லுமணி
வெச்சிருப்பா...

No comments: